அதிமுகவில் இருக்கிறேனா? இல்லையா? எடப்பாடியிடம் கேட்டு சொல்லுங்கள்.. - கொந்தளித்த சிவி சண்முகம்
விழுப்புரம்: ''நான் அதிமுகவில் இருக்கிறேனா? இல்லையா? என்பது எனக்கே தெரியவில்லை. இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டு சொல்லுங்கள்'' என்று கோபமாக சிவி சண்முகம் கூறினார். சிவி சண்முகம், எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ளார். விரைவில் தவெகவில் இணைய உள்ளதாகவும், இன்று தவெக கொடியுடன் காரில் சென்ற சிலருடன் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படும் நிலையில் இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சிவி சண்முகம். இவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ளார். இதனால் அவர் தனது தலைமையில் எம்எல்ஏக்களை தனி அணியாக சேர்த்து முதல்வர் விஜய் சட்டசபையில் நம்பிக்கை கோரிய தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

தற்போது சிவி சண்முகம் அணியில் இருந்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமி அணியில் சேர்ந்துவிட்டனர். சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்பட இன்னும் 7 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து விட்டனர்.
விரைவில் சிவி சண்முகமும் தவெகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று தவெக கொடியுடன் காரில் வந்தவர்களை சிவி சண்முகம் திண்டிவனத்தில் வைத்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இன்று இரவு அவர் தனது ஆதரவாளர்களை சந்தித்து சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு சிவி சண்முகம் வெளியே வந்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பினர். பத்திரிகையாளர் ஒருவர், ''இன்று ஆலோசனை கூட்டம் நடந்துள்ளதே? '' என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு சிவி சண்முகம், ''யாரு சொன்ன இது ஆலோசனை கூட்டம். நான் ஒரு வாரம் கழித்து வந்துள்ளேன். என்னை எல்லோரும் வந்து பார்த்தனர். இது வழக்கமான ஒன்று தான்'' என்றார்.
இதையடுத்து, ''நீங்கள் தவெகவில் சேர உள்ளதாக ததொடர்ச்சியாக தகவல்கள் பரவி வருகிறதே'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ''அப்படியெல்லாம் இல்லை. வேறு என்ன.. கேட்டுக்கோங்க.அதிமுகவில் இருக்கிறேனா? இல்லையா? என்று தானே கேட்கிறீர்கள். அதிமுகவில் இருக்கிறேனா.. இல்லையா என்பதை எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால் எனக்கே தெரியவில்லை. நான் அதிமுகவில் இருக்கிறேனா.. இல்லையா என்பது தெரியவில்லை. நீங்கள் கேட்டு என்னிடம் சொல்லுங்கள்'' என கோபமாக கூறினார்.












Click it and Unblock the Notifications