தியானேஸ்வரன், மகனுக்கு முன் ஜாமீன்
சென்னை: தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத் தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான தியானேஸ்வரன், அவரது மகன் சுகனேஸ்வரன் மற்றும் அவரது இரு நண்பர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தில் சமீபத்தில் பிளவு ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினர் நடிகர் நெப்போலியன் தலைமையில் தனிகழகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும் தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத் தலைவராக தியானேஸ்வரனே நீடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழக அலுவலகம் சூறையாடப்பட்டது.
இந்தப் பின்னணியில், எதிர் அணியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தான் கூடைப்பந்தாட்டக் கழக அலுவலகத்திற்குச் சென்றபோது தன்னை தியானேஸ்வரன், அவரது மகன் சுகனேஸ்வரன், அவரது நண்பர்கள் பிரபாகர், ராஜேஷ் ஆகியோர் தாக்கியதாக கூறியிருந்தார்.
இதையடுத்து நான்கு பேரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி, நான்கு பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நான்கு பேரும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் 3 நாட்களுக்கு நேரில் ஆஜராக வேண்டும். ரூ. 10 ஆயிரம் உத்தரவாதத்தின் பேரில் முன்ஜாமீன் பெறலாம் எனவும் தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications