ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்: சரத்குமார் கோரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அதுகுறித்து மற்றவர்களிடம் யோசனை கேட்டுக் கொண்டிருக்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவியில் நீடிக்கக் கூடாது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து இன்று சென்னை மெமோரியல் ஹால் பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்திற்கு சரத்குமார் தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். காலி சிலிண்டர்களை கையில் ஏந்தியபடி பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைத் தடுக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கூறுகிறார் ப.சிதம்பரம். பிறரிடம் யோசனை கேட்பவர்கள் மத்தியில் அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்கள். எனவே ப.சிதம்பரம் உடனடியாக நிதியமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார்.
விஜய டி.ராஜேந்தர் போராட்டம்:
இதேபோல இன்று சென்னையில், லட்சிய திமுக சார்பிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெரும் திரளானோர் குறிப்பாக பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். விறகு அடுப்புகளை கையில் ஏந்தியபடி பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்தர், டீசல் விலை உயர்வோடு பிரச்சினை நின்று விடவில்லை. இப்போது லாரி வாடகையையும் 20 சதவீதத்திற்கு ஏற்றி விட்டனர். இதனால் காய்கறிகள், பால் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications