ரவுடியை ஓட ஓட விரட்டி கொன்று எரித்த 3 பெண்கள்!
திருநெல்வேலி: குடிக்கப் பணம் கேட்டு அடித்து, உதைத்த ரவுடியை, அவரது அண்ணன் மனைவி மற்றும் இரு மகள்கள் தெருவில் ஓட ஓட விரட்டி, சரமாரியாக வெட்டிக் கொன்றனர். பின்னர் வீட்டுக்கு அவரது உடலை இழுத்து வந்து மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்து விட்டு தலைமறைவானார்கள்.
நெல்லை, பாளையங்கோட்டை பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஒரு ரவுடி. வெடிகுண்டு வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீதுஉள்ளன.
இவரது அண்ணன் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதையடுத்து அண்ணன் மனைவி வேலம்மாளும், செல்வராஜும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். இவர்களுடன் வேலம்மாளின் 3 மகள்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குடிப்பதற்குப் பணம் கேட்டு வேலம்மாளின் மூத்த மகள் முத்துமாரியிடம் தகராறு செய்துள்ளார் செல்வராஜ். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், முத்துமாரியை அடித்து உதைத்தார்.
இதைப் பார்த்து ஓடி வந்த வேலம்மாள், செல்வராஜைத் தடுத்துப் பார்த்தார். ஆனால் அவர் தொடர்ந்து முத்துமாரியை அடித்து உதைத்தார். இதனால் கோபமடைந்த வேலம்மாள், முத்துமாரி மற்றும் இன்னொரு மகள் சுகந்தி ஆகியோர் சேர்ந்து செல்வராஜை நையப்புடைத்தனர்.
அடி தாங்க முடியாமல் செல்வராஜ் வீட்டை விட்டு வெளியே ஓடினர். ஆனாலும் விடாமல் 3 பெண்களும் துரத்தி துரத்தி அரிவாள், கத்தியால் வெட்டித் தள்ளினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த செல்வராஜ், சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
பின்னர் உடலை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் எடுத்துச் சென்று மண்ணெண்ணை ஊற்றி தீவைத்தனர். இதில் அவரது உடல் முக்கால்வாசி கருகியது.
இத்தனையையும் அந்தப் பகுதி மக்கள் பெரும் பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் வெளியே வந்த 3 பெண்களும், நாங்கள் போலீஸில் சரணடையப் போவதாக கூறி விட்டுச் சென்றனர்.
ஆனால் 3 பேரும் போலீஸுக்குச் செல்லாமல் தலைமறைவாகி விட்டனர். செல்வராஜின் எரிந்த உடலை மீட்ட போலீஸார் 3 பெண்களையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications