அரண்மனையை விட்டு வெளியறினார் ஞானேந்திரா
நேபாளத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாவோயிட்ஸ்டுகள் வெற்றி பெற்றனர். இதையடுத்து மே 28ம் தேதி நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வருவதாகவும், இனி நேபாளம் குடியரசு நாடு எனவும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதையடுத்து மன்னர் பதவியை இழந்தார் ஞானேந்திரா. அவர்15 நாட்களுக்குள் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும் என மாவோயிஸ்டுகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில்நேற்று அரண்மனையை விட்டு வெளியேறினார் ஞானேந்திரா. குடும்பத்துடன், காத்மாண்டுவுக்கு வெளியே வனப் பகுதியில் அமைந்துள்ள நாகார்ஜூனா மாளிகைக்கு அவர் இடம் பெயர்ந்தார்.
அங்கு மற்றவர்களைப் போல இனி சாதாரண வாழ்க்கை வாழுவார் ஞானேந்திரா.
முன்னதாக, அரண்மனையை விட்டு வெளியேறும் முன்பு செய்தியாளர்களிடம் பேசினார் ஞானேந்திரா. அப்போது அவர் கூறுகையில், மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நேபாள அரசின் முடிவை நான் மதிக்கிறேன். அதன் படி அரண்மனையை விட்டு வெளியேறுகிறேன்.
எனது மணிமகுடம், செங்கோல் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து விட்டேன். அரண்மனையையும் ஒப்படைத்து விட்டேன். எல்லாவற்றையும் கொடுத்து விட்டேன்.
மக்கள் தீர்ப்பு மகத்தானது. அதை மதிக்கிறேன். நான் நேபாளத்தை விட்டு எங்கும் ஓட மாட்டேன். தலைமறைவாக இருக்க மாட்டேன். நேபாள அரசியலை கூர்ந்து கவனித்து வருவேன்.
2001ம் ஆண்டு எனது சகோதரர் மறைந்த மன்னர் பீரேந்திராவையும், அவரது குடும்பத்தினரையும் நான்தான் கொன்றதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அது முற்றிலும் அவதூறானது. எனது சகோதரர் மற்றும் குடும்பத்தினரின் மரணத்திற்கு துக்கம் கூட கொள்ள முடியாத அளவுக்கு என் மீது அப்போது குற்ற அம்புகள் பாய்ந்து கொண்டிருந்தன.
எனக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் இருப்பதாகவும், பெருமளவில் பணத்தை நான் வெளிநாட்டு வங்கியில் போட்டு வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். எனக்கு நேபாளத்தில் மட்டுமே சொத்துக்கள் உள்ளன. அந்த சொத்துக்களும் தற்போது நாட்டுடமையாக்கப்பட்டு விட்டன. கடந்த 7 ஆண்டுகளில் நான் எந்த சொத்தையும் புதிதாக வாங்கவில்லை. பணமும் சேர்க்கவில்லை என்றார் ஞானேந்திரா.
பின்னர் தனது குடும்பத்தினருடன், போலீஸ் பாதுகாப்புடன் ஞானேந்திரா காட்டு மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார்.













Click it and Unblock the Notifications