எதியூரப்பாவுக்காக கோவில்களில் தினசரி பூஜை!
பெங்களூர்: கர்நாடக முதல்வர் எதியூரப்பா நலமுடன் இருப்பதற்காக கோவில்களில் தினசரி பூஜை நடத்த வேண்டும் என்று அம்மாநில அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அந்த உத்தரவை கர்நாடக பாஜக அரசு திரும்பப் பெற்று விட்டது.
கர்நாடக பாஜக அரசில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவியேற்றிருப்பவர் கிருஷ்ணயா ஷெட்டி. இவர் மாநில அறநிலையத்துறை ஆணையர் டி.ஷாம் பட்டை அழைத்து, முதல்வர் நலமாக இருக்க வேண்டி, அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் தினசரி பூஜை நடத்த உத்தரவிடுமாறு கூறினார்.அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிர்வாகங்ளுக்கு உத்தரவு அனுப்பினார்.
அதன்படி, 34,000 கோவில்களில் தினசரி முதல்வர் பெயரில் பூஜை நடத்த உத்தரவு போனது. இதற்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தின.
மேலும், கர்நாடக சமூக நீதிக்கான வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிவர்மகுமாரின் மகளும்,வக்கீலுமான பெல்லி என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications