கடலூரில் திமுக மகளிர் மாநாடு-பிரமாண்ட ஊர்வலம்

திமுக மகளிர் அணியின் முதலாவது மாநாடு இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வசந்தி கணேசன் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் பிற்பகல் 2 மணியளவில் பிரமாண்ட பேணி தொடங்கியது. சில்வர் பீச்சில் தொடங்கிய இந்த பேரணிக்கு முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் தலைமை தாங்கினார். நூர்ஜஹான் பேகம் பேரணியைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக சென்னையிலிருந்து இன்றுகாலை முதல்வர் கருணாநிதி கடலூர் வந்தார். அவருக்கு வழியெங்கும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிசாவடியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டுக்கென மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிரமாண்ட மேடையும், பந்தலும் போடப்பட்டுள்ளது.
2 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டுள்ளது. இதில் மூன்றில் 2 பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடம் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தலைவர்களின் பேச்சை கேட்க வசதியாக பந்தலுக்கு உள்ளேயும், வெளியேயும் 500க்கும் மேற்பட்ட டிவி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 300க்கும் அதிகமான ஸ்பீக்கர்களும் வைக்கப்பட்டுள்ளன.
2 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு. நபருக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
முதல் நாள் மாநாடு அரசியல் மாநாடாக நடைபெறுகிறது. 2ம் நாள் மாநாடு சமுதாய சீர்திருத்த மாநாடாக நடைபெறும்.
இரவு 8 மணிக்கு கனிமொழி எம்.பி. உரை நிகழ்த்துகிறார்.
நாளைய மாநாட்டுக்கு காஞ்சனா கமலநாதன் தலைமை தாங்குகிறார். புதுக்கோட்டை விஜயா தொடங்கி வைத்துப் பேசுகிறார். பிற்பகலில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
இரவு 7 மணிக்கு நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி நிறைவுரை நிகழ்த்துகிறார்.












Click it and Unblock the Notifications