நாளை திமுக உயர்நிலைக் கூட்டம்: பாமக உறவு குறித்து முடிவு!
கடலூர்: பாமகவுடனான உறவு குறித்து முடிவு செய்ய திமுக உயர் நிலைக் குழுக் கூட்டம் நாளை கூடுகிறது.
கடலூர் திமுக மகளிர் அணி மாநில மாநாட்டில் நிறைவுரையாற்றிய முதல்வர் கருணாநிதி இதைத் தெரிவித்தார். அவர் பேசுகையில்,
நேற்றும் இன்றும் என்னுடைய கருத்தைக் கவரும் வகையிலும் கண்ணைக்கவரும் வகையிலும் காட்சி தந்து பேரணி நடத்தி, இரவு 12 மணி வரையிலே மாநாட்டையும் சிறப்புற நடத்தி, இன்று காலை முதல் மாலைவரை பல தலைப்புகளில் சிறப்புரையாற்றியும், படத் திறப்புரையாற்றியும் பல அரிய கருத்துக்களை வாரி வழங்கிய மாநில மகளிரணியினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரணியைக் கண்டு மலைத்துப் போனேன்.
இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மகளிரணியை பரப்ப வேண்டும், விரிவாக்க வேண்டும். திமுக கொள்கைகளை பரப்ப வேண்டும். சமுதாய சீர்திருத்த வித்துக்களை ஊன்ற வேண்டும்.
ஒவ்வொரு நாளும் எத்தனையோ செய்திகள். நல்லது நடந்தால் அதை நான்கு அங்குல செய்தியாகவும், அல்லது நடந்தால் ஐம்பது அங்குல செய்தியாகவும் போட சில பத்திரிகைகள் நாட்டிலேஉள்ளன.
அவற்றைப் பார்த்து பறக்கின்ற பாமக மக்களும் ஏராளம் உள்ளனர். நான் மறுக்கவில்லை. அவர்களை நம்பியே சில பத்திரிகைகள் நடக்கின்றன.
கடலூரில் மாநாடு என்றால் எதற்காக? கேட்பது கழகத் தோழரோ, மகளிர் அணியினரோ அல்ல, பத்திரிக்ைக்காரர்கள்தான். நல்ல எண்ணத்தோடு கேட்டால், விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். இவர்களுக்கும் வேறு சில கட்சிகளுக்கும் ஊடல் விளையுமா? ஊடர் முறியுமா? என்கின்ற அந்த எண்ணத்தோடு அந்த ஆசையோடு கேட்கிறவர்கள் உண்டு.
அவர்களுக்கு எல்லாம் நான் இன்றைக்கு பதில் சொல்வதாக இல்லை. இங்கு இருக்கும் நானோ, பொதுச்செயலாளரோ பொருளாளரோ நான்கு பேர் சேர்ந்து ஒரு விஷயத்தை சொல்லி விட முடியாது. உயர்நிலைக் குழு என்று ஒன்று இருக்கிறது. 17ம்தேதி மாலை உயர் நிலைக்குழு அண்ணா அறிவாலயத்தில் கூட இருக்கிறது.
அங்கே இதைப் பற்றி விவாதித்து, நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி நம்முடைய அரசியல் கணிப்பு என்ன என்று அன்றைக்குத்தான் வெளியிட முடியும். யாரோ சில பேர் அவசரப்பட்டு ஏதேதோ சொல்கிறார்கள் என்பதற்காக அதே பாணியிலே நானும் கட்சி நடத்த முடியாது. நானும் அவசரப்பட முடியாது.
எனவே 17ம் தேதி அதைப் பற்றி விரிவாகப் பேசுவோம். எனவே அந்த அளவோடு இந்தப் பிரச்சினையை நிறுத்துகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications