திமுக கூட்டணி வலுவிழப்பது நல்லதல்ல: திருமாவளவன்
விழுப்புரம்: சமூக அக்கறை இல்லாத சக்திகளும், மதவெறி சக்திகளும் மக்களை ஏய்க்கும் போது தி.மு.க. கூட்டணி வலுவிழந்து இருந்தால் அது நல்லது அல்ல என்று விடுதலைச் சிறுத்ைதகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விரோத சக்திகளையும், மதவெறி சக்திகளையும் முறியடிக்க தி.மு.க. கூட்டணி வலுவாய் இருக்க வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும்.
திரைப்பட மாயை மற்றும் மதவெறி பாசிசம் ஆகியவை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போட்டி போடும் சூழ்நிலையில் அரசியல் களத்தில் தி.மு.க. கூட்டணி மிகுந்த வலிமையோடு தேர்தலை சந்திக்க வேண்டும்.
எனவே தி.மு.க., பா.ம.க. இடையேயான உரசல்கள் இருந்தாலும் விரிசல்கள் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.இதுதொடர்பாக நேரில் சந்தித்து அவர்களிடம் சமாதானத்திற்கான பணியில் ஈடுபடுவதில் தோழமை கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் இதனை கடமையாக கருதுகிறோம்.
தி.மு.க., பா.ம.க. இடையே ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பெரிய அளவிலே பாதிப்பதாக மாறாது என்று நம்புகிறோம். அவ்வாறு கூட்டணி உறவில் பாதிப்பு ஏற்படுமானால் விடுதலை சிறுத்தை சமாதான நடவடிக்கையில் ஈடுபடும்.
ஒருபுறம் சமூக அக்கறை இல்லாத சக்திகளும், இன்னொரு புறம் மதவெறி சக்திகளும் மக்களை ஏய்க்கும் போது தி.மு.க. கூட்டணி வலுவிழந்து இருந்தால் அது நல்லது அல்ல.
தோழமை கட்சிகளை கட்டி காப்பாற்றி வருபவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. அதுபோல் தற்போதைய சூழ்நிலையிலும் நல்லிணக்கமான முடிவு மேற்கொள்வார் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
பேசித் தீர்க்க கிருஷ்ணசாமி கோரிக்கை:
இதற்கிடையே, பிரச்சினைகளை திமுகவும், பாமகவும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஏற்படுத்த சோனியா காந்தி கடும் முயற்சி எடுத்தார். அவரது நல்லெண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.
கூட்டணி தர்மத்தை புரிந்து கொண்டு நாட்டின் நலன் கருதி அனைவரும் செயல்பட வேண்டும். மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் அவற்றை எதிர்த்து அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
கருத்து வேறுபாடு இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications