லண்டனிலிருந்து நாளை சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்
சென்னை: லண்டன் சென்றிருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்.
சிகிச்சைக்காக அமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளார். இதன் காரணமாக புதிய சட்டசபைக் கட்டட வளாக அடிக்கல் நாட்டு விழா, கடலூர் திமுக மகளிர்அணி மாநாடு ஆகியவற்றில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
மிகவும் பரபரப்பான சூழலில் இன்று நடக்கும் திமுக உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
4ம் தேதி லண்டன் சென்ற ஸ்டாலின், இன்று திரும்புவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் திடீரென சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் ஸ்டாலினை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த தனது சொந்த விமானத்தில் லண்டன் புறப்பட்டுச் சென்றதால் ஸ்டாலினின் பயணம் ஒரு நாள் தாமதப்பட்டுள்ளது.
நாளை ஸ்டாலின் புறப்பட்டு சென்னை திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று அதிகாலையில் ஸ்டாலின் திரும்புவார் என எதிர்பார்த்து விமான நிலையத்தில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
ஸ்டாலின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வருவார் என்று கூறப்பட்டது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அதிகாலை 4.30 மணிக்கு வந்தது. 5.30 மணி வரை போலீசார் காத்திருந்தனர். ஆனால் ஸ்டாலின் வரவில்லை. எனவே அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள்.
நேற்று லண்டன் போய் சேர்ந்த கலாநிதிமாறன், மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. நாளை அதிகாலை ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications