அம்பை: ரூ.500 கோடியில் சர்க்கரை ஆலை
அம்பாசமுத்திரம்: அம்பை அருகே இடைகாலில் ரூ.500 கோடி முதலீட்டில் நவீன சர்க்கரை ஆலை ஒன்றை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
இடைகாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
அம்பை வட்டார விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று கரும்பு ஆலை அமைக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி இடைகாலில் ரூ.500 கோடி முதலீட்டில் 250 ஏக்கரில் அதி நவீன சர்க்கரை ஆலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஜூலை மாதம் தொடங்கவிருக்கின்றன. இது அரசு அனுமதியுடன் நடைபெறும் தனியார் ஆலை.
இந்த சர்க்கரை ஆலையில் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டன் வரை சர்க்கரை உற்பத்தி செய்யலாம். 750 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் கரும்பு சக்கையில் இருந்து 50 மெகா வாட் மின்சாரமும், 1 லட்சம் லிட்டர் எத்தானாலும் தயாரிக்கலாம்.
இந்தியாவிலேயே நவீன தொழில் நுட்ப அடிப்படையில் கரும்பு உற்பத்தி செய்யப்படுவது நமது மாநிலத்தில்தான். கரும்பு நடவு முதல் அறுவடை வரை இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலையின் சார்பில் இனி வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்றுத் தரப்படும். நவீன தொழில் நுட்ப அடிப்படையில் கரும்பு உற்பத்தி செய்வதால் 10 முதல் 15 டன் வரை சர்க்கரை அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆலை 2009 டிசம்பர் மாதத்திலிருந்து செயல்படத் துவங்கும், என்றார் ஆவுடையப்பன்.