28 நாள் குஜ்ஜார் ரயில் பாதை மறியல் போராட்டம் வாபஸ்
ஜெய்ப்பூர்: கடந்த 28 நாட்களாக ரயில் பாதையை ஆக்கிரமித்து நடத்தி வந்த தர்ணாப் போராட்டத்தை குஜ்ஜார்கள் விலக்கிக் கொண்டுள்ளனர்.
பழங்குடியினர் அந்தஸ்து தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் மே 23ம் தேதி குஜ்ஜார் சமூகத்தினர், குஜ்ஜார் இட ஒதுக்கீட்டு நடவடிக்கை குழு என்ற பெயரில் பெரும் போராட்டத்தைத் தொடங்கினர்.
ஆரம்பத்தில் ராஜஸ்தானில் நடந்த இந்தப் போராட்டம் பின்னர் வட இந்தியாவுக்கும், தலைநகர் டெல்லிக்கும் இடம் பெயர்ந்தது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பயானா அருகில் உள்ள பில்லுகபுரா-கார்வாடி ரயில் பாதையை மறித்து தர்ணா நடத்தப்பட்டு வந்தது.
இதன் காரணமாக மும்பை - டெல்லி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.
இந்த நிலையில், குஜ்ஜார் போராட்டத்திற்கு ராஜஸ்தான் அரசு தீர்வு கண்டதையடுத்து இப்போராட்டத்தை குஜ்ஜார் சமூகத்தினர் விலக்கிக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து இந்த மார்க்கத்தில் சேதப்படுத்தப்பட்டிருந்த ரயில் பாதைகளை சீரமைக்குப் பணியில் ரயில்வே ஊழியர்கள் இறங்கியுள்ளனர். விரைவில் சேதம் சரி செய்யப்பட்டு வழக்கமான ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சிக்கந்தரா, குஷாலிபுரா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த ரயில் பாதை மறியல் போராட்டங்களும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பாதைகள் அனைத்திலும், தண்டவாளத்தில் கூடாரம் போட்டு அங்கேயே தங்கி சமைத்துச் சாப்பிட்டும், தண்டவாளத்தை சேதப்படுத்தியும் குஜ்ஜார் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.