ஜெ பண்ணை வீடு: 24ம் தேதி டாக்டர் கிருஷ்ணசாமி சாட்சியம்
சென்னை: தலித்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிலத்தில் ஜெயலலிதா-சசிகலா பண்ணை வீடு கட்டியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள கமிஷன் முன் வரும் 24ம் தேதி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆஜராகி சாட்சியம் அளிக்கவுள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம் சிறுதாவூர் கிராமத்தில் தலித்களுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவரது உயிர்த் தோழி சசிகலாவும் ஆக்கிரமித்து பண்ணை வீடு கட்டியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம் சாட்டியது.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர்கள் மற்றும் நிலமற்ற ஏழைகள் 20 பேருக்கு தரப்பட்ட நிலம் இது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அளித்த புகாரின்பேரில் இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை முதல்வர் கருணாநிதி அமைத்தார்.
இந்தக் கமிஷன் 2007ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது.
சிறுதாவூர் பகுதியில் 1967ம் ஆண்டு இந்த நிலம் 20 ஏழைகளுக்கு விவசாயத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 20 பேரில் இப்போது வெள்ளையன், அர்ஜூனன், நாகூரான் ஆகிய 3 பேர் மட்டுமே இப்போது உயிரோடு உள்ளனர். மற்ற 17 பேரின் வாரிசுதாரர்கள் தான் உள்ளனர்.
அவர்களிடம் இருந்த நிலம் பலரிடம் கை மாறியுள்ளது. 1983ம் ஆண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் தந்தை கிருஷ்ணமாச்சாரி, சுனில், எஸ்.வி.கோபாலன் ஆகியோர் 2.5 ஏக்கர் நிலத்தை ரூ.8,000க்கு வாங்கியுள்ளனர்.
அதில் ஒரு பகுதியை பின்னர் இசையமைப்பாளர் இளையராஜா வாங்கியுள்ளார்.
பின்னர் 2005ம் ஆண்டு இந்த நிலத்தை பரணி ரிசார்ட்ஸ் என்ற நிறுவனம் வாங்கியது. இந்த நிறுவனத்தி்ன் பங்குதாரர்கள் யார் தெரியுமோ.. ?, சசிகலாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி, சித்ரா ஆகியோர் தான்.
(நிலத்தை விற்க 'இசை' தரப்பு நிர்பந்திக்கப்பட்டதாகவும் கூட முன்பு ஒரு குற்றச்சாட்டு எழுந்தது நினைவுகூறத்தக்கது).
இப்படியாக வாங்கப்பட்ட நிலத்தில் பிரமாண்டமான பண்ணை வீட்டை கட்டினார் ஜெயலலிதா. இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கட்டதை எதிர்த்து சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அது தள்ளுபடி ஆனதும், சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார் சித்ரா. அங்கும் வழக்கு தள்ளுபடி ஆனது. இதையடுத்து விசாரணை கமிஷன் தனது விசாரணையை தீவிரப்படுத்தியது.
கடந்த 16ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் விசாரணை கமிஷன் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
17ம் தேதி காஞ்சீபுரம் மாவட்ட கம்யூனிஸ்ட் பிரமுகர் சங்கர் சாட்யம் அளித்தார்.
19ம் தேதி (நேற்று) ஓய்வுபெற்ற கப்பல் படை அதிகாரி கோபால்ராவ் என்பவர் சாட்சியம் அளித்தார். அவர் தனது 1.47 ஏக்கர் நிலம் ஜெயலலிதாவின் காம்பவுண்டுக்குள் 'சிக்கிக் கொண்டுள்ளது' என்று புகார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மொத்தம் 23 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.
இந் நிலையில் வரும் 23ம் தேதி வருவாய்த் துறை அதிகாரிகளும், 24ம் தேதி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் சாட்சியம் அளிக்க உள்ளனர்.
வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த விசாரணை கமிஷன் தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications