மத்திய அரசுக்கு மாயாவதி ஆதரவு வாபஸ்
டெல்லி: மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதி அறிவித்துள்ளார்.
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மாயாவதி ஆதரவு அளித்து வந்தார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 19 எம்.பிக்கள் லோக்சபாவில் உள்ளனர்.
இந் நிலையில் சமீப காலமாக இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. பல்வேறு பிரச்சினைகளில் இரு கட்சிகளும் மோதல் போக்கில் இறங்கின.
இந்த நிலையில், அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் மாயாவதியின் பரம விரோதியான முலாயம் சிங் யாதவின் ஆதரவைப் பெற காங்கிரஸ் தீர்மானித்தது. இதனால் கடுப்படைந்தார் மாயாவதி.
இந்த நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி எனது பெயரையும், பகுஜன் சமாஜ் கட்சியின் பெயரையும், உ.பி. அரசின் பெயரையும் கெடுக்க பல வழிகளிலும் முயன்று வருகிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸும், பாஜகவும் ஒன்றுதான் என்பதை நிரூபித்து விட்டது.
இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டது என்றார்.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் ஒருபக்கம் மிரட்டி வரும் நிலையில் மாயாவதியின் இந்த திடீர் நடவடிக்கை, நிச்சயம் மத்திய அரசுக்கு சந்தோஷமளிக்காத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications