போலீசார் மீது குண்டு-தமிழர் நீதிக் கட்சி பிரமுகர் கைது
அரியலூர்: அரியலூரில் போலீசார் மீது வெடிகுண்டு வீச முயன்ற தமிழர் நீதிக் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
அரியலூர் சத்தியா நகரை சேர்ந்தவர் சுதாகர். இவர் தமிழர் நீதி கட்சியின் நகர செயலாளராக உள்ளார்.
நேற்று இரவு அரியலூர் பஸ் நிலையம் அருகில் குடி போதையில் ஆபாசமாக பேசியுள்ளார். அப்போது அந்த பகுதி வழியாக ரோந்து வந்த காவலர் உலகநாதன் அவரை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சுதாகரை காவலர் உலகநாதன் பிடிக்க முயன்றுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த சுதாகர், உலகநாதனை தாக்கியுள்ளார்.
தகவல் அறிந்த சப் இனஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுதாகரை பிடிக்க முயன்றனர்.
அப்போது தன்னை பிடிக்க முயன்றால் வெடி குண்டு வீசி கொலை செய்து விடுவதாக கூறி, நாட்டு வெடி குண்டை காட்டி சுதாகர் போலீசாரை மிரட்டினாராம்.
இருப்பினும் துணிச்சலுடன் அவரை பிடித்த போலீசார் அவரிடமிருந்து இரண்டு நாட்டு வெடி குண்டுகளை கைப்பற்றினர்.
சுதாகர் மீது போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது பல வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.