ஜூலை 2 முதல் ஸ்டிரைக்-ஜவுளி ஆலை அதிபர்கள் முடிவு
ஈரோடு: பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த கோரி வரும் ஜூலை 2 ம் தேதி தமிழகம் முழுக்க வேலை நிறுத்தம் செய்ய ஜவுளி தொழிற்சாலை அதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இதனால் இந்திய ஜவுளி வர்த்தகத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுளது.
மேலும், பருத்தி சாகுபடி குறைவு, பஞ்சு விலையேற்றம், டீசல் பெட்ரோல் விலை உயர்வு, தொழில் மந்த நிலை, நூல் விலையேற்றம், மின் கட்டண உயர்வு போன்ற பல பிரச்சனைகள் காரணமாக ஜவுளி தொழில் பெரும் பாதிப்படைந்துள்ளது.
இதனால் ஜவுளி ஆலை அதிபர்கள் மற்றும் அதை சார்ந்த தொழில் செய்து வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஜவுளி தொழிலை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஈரோட்டில் அவசர ஆலோசனை கூட்டம் ஈரோடு கிளப் மெலாஞ்சில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஸ்பின்னிங் மில், சைசிங் மற்றும் வார்பிங் மில்கள், விசைத்தறி, கைத்தறி, பின்னலாடை போன்ற தொழில்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு மதிவாணன் தலைமை தாங்கினார். அனைத்து வணிகர் சங்க தலைவர் நடராஜ முதலியார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். கழிவு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். பஞ்சு பதுக்கலை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பஞ்சு மற்றும் கோன் நூலுக்கு விதித்துள்ள 4 சதவீத வரியை நீக்க வேண்டும்.
சாயக் கழிவு பிரச்சனைகள் குறித்து மாநில அரசு உரிய திட்டங்களை வகுத்து மூடப்பட்டுள்ள சாயப் பட்டறைகளை திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 2 ம் தேதி தமிழகம் முழுவதும் ஜவுளி மற்றும் அதை சார்ந்த தொழிற்சாலைகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.