பாக்: மரண தண்டனை ரத்தாகிறது-தப்புகிறார் சரப்ஜித்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் அதை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிபர் முஷாரப்புக்கு, பிரதமர் கிலானி பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து இந்தியர் சரப்ஜித் சிங் தலை தப்புகிறது.
பஞ்சாபைச் சேர்ந்த சரப்ஜித் சிங், பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்று கூறி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து லாகூர் சிறையில் அவர் பல வருடமாக அடைபட்டுள்ளார்.
அவருக்கு இருமுறை தூக்கில் போட நாள்குறிக்கப்பட்டது. இருப்பினும் இந்திய அரசின் தொடர் முயற்சி மற்றும் முன்னாள் பாகிஸ்தான் மனித உரிமை அமைச்சர் பர்னி ஆகியோரின் முயற்சிகள் காரணமாக சரப்ஜித் சிங்கின் தண்டனை தள்ளிப் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சரப்ஜித் சிங்குக்கு நிம்மதி அளிக்கும் வகையிலான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் மரண தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் வாடி வரும் அனைத்துக் கைதிகளுக்கும் அத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைத்து அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளார் கிலானி.
இதையடுத்து சரப்ஜித்சிங் உயிர் தப்பும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இத்தகவலை பர்னியும் உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் 3 அல்லது நான்கு நாட்களில் இதுதொடர்பான உத்தரவை அதிபர் முஷாரப் பிறப்பிப்பார் எனவும் பர்னி தெரிவித்துள்ளார்.