முஸ்லிம் பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஒபாமா
சிகாகோ: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா, வாக்காளர்களை அவமானப்படுத்திய தன் கட்சினரின் செலுக்காக மன்னிப்புக் கேட்டார்.
ஒபாமாவுக்கு ஆதரவாக டெட்ராய்ட் நகரில் நேற்று பிரசார பேரணி நடந்தது.
இதில் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய மேடைக்கு பின்னால் நிற்க முயன்ற 2 முஸ்லிம் பெண்களை அவரது தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் தடுத்து விட்டனர்.
ஷிமா அப்தெல் இபாதீல் மற்றும் ஹெப்பா அரேப் என்ற 2 பெண்களும் முகத்தை மறைக்கும் பர்தா போன்ற துணியை தலையில் கட்டி இருந்ததால் அவர்களை மேடைக்கு பின்னால் நிற்கவிடாமல் தடுத்து விட்டனர் பிரச்சாரக் குழுவினர்.
இது பற்றி அறிந்ததும் பதறிப்போன ஒபாமா அவர்கள் இருந்த இடத்துக்கே போய் தன் கட்சியினரின் செயலுக்காக மன்னிப்புக் கேட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இந்தத் தவறைச் செய்தவர்கள் தன்னார்வ தொண்டர்கள்தான். என் கட்சி பிரமுகர்கள்கூட இல்லை. ஆனாலும் அவர்கள் நடந்து கொண்ட விதம் தவறானது. இது என் கட்சி கொள்கையை பிரதிபலிக்கிற மாதிரி இல்லை. இது போல பாரபட்சம் காட்டப்படுவதற்கு நான் என்றும் எதிரானவன். நடந்த தவறுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த அறிக்கையால் திருப்தியடையாத அமெரிக்க இஸ்லாமிய உறவுக் கழகம், பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஒபாமா நேரடியாகப் போய் மன்னிப்பு கேட்டது மட்டும் போதாது. பகிரங்க மேடையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் அமைப்புகளிலேயே மிக வலுவானது இந்த அமெரிக்க இஸ்லாமிய உறவுக் கழகம் ஆகும்.