காரத்துடன் 3வது அணி தலைவர்கள் சந்திப்பு!!

அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் கிளைமேக்ஸ் நெருங்கி விட்டது. நாளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில் மத்திய அரசு தனது இறுதி முடிவை தெரிவிக்க வேண்டும் என இடதுசாரிகள் கெடு விதித்துள்ளனர்.
தங்களது கோரிக்கைக்கு மாறாக மத்திய அரசு முடிவெடுத்தால் ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று இடதுசாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆட்சியைக் காப்பாற்ற உள்ள வழிகள் குறித்து காங்கிரஸ் தீவிரமாக முயன்று கொண்டுள்ளது.
இந்த நிலையில் இன்று முக்கிய நிகழ்வாக, 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துடன் திடீர் ஆலோசனையை தொடங்கியுள்ளனர்.
முதலில் தெலுங்குதேசம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராம் மோகன் ராவ், காரத்தை சந்தித்துப் பேசினார். அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்தது.
இதையடுத்து சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங்யாதவும் காரத்தை சந்திக்கவுள்ளார்.
3வது அணி தலைவர்கள், காரத்தை சந்தித்து ஆலோசனை நடத்துவது தேசிய அளவில் புதிய பரபரப்பை கூட்டியுள்ளது. நாளைய கூட்டத்தில் தங்களது கோரிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிராகரித்து விட்டால், 3வது அணியுடன் இணைந்து இடதுசாரிகள் செயல்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த மூன்றாவது அணியில் அதிமுகவும் சில நாட்கள் இருந்தது. பின்னர் திடீரென அதிலிருந்து கழன்று கொண்டு அந்த அணியின் தலைவர்களுக்கு ஜெயலலிதா அதிர்ச்சி வைத்தியம் தந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications