கேபிளில் 'யாரடி நீ மோகினி': ஆபரேட்டர் கைது - சரத் கட்சி பிரமுகருக்கு வலை வீச்சு
புளியங்குடி: புளியங்குடியில் திருட்டுத்தனமாக கேபிள் டிவியில் யாரடி நீ மோகினி படத்தை ஒளிபரப்பிய கேபிள் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சரத் குமார் கட்சியின் நகர செயலாளர் பாலசுப்பிரமணியனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
புளியங்குடி சிந்தாமணி பகுதியில் கேபிள் டிவியில் அனுமதி இல்லாமல் நடிகர் தனுஷ்-நயன்தாரா நடித்த புதிய படமான யாரடி நீ மோகினி ஒளிபரப்பப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி அசோக் குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், ராமலெட்சுமி மற்றும் போலீசார் சிந்தாமணியில் உள்ள தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர் அறையில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு யாரடி நீ மோகினி புதிய படத்தின் சிடிக்கள் இருந்தன. இதையடுத்து அங்கிருந்த சிடி, மற்றும் சிடி பிளேயர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி வழக்கு பதிந்து சிந்தாமணியை சேர்ந்த ஆபரேட்டர் குறிஞ்சிமுருகன் என்பவரை கைது செய்தனர். மேலும் கேபிள் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் என்பவரை தேடி வருகின்றனர்.
இவர் நடிகர் சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி புளியங்குடி நகர செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.