மாணவி மீது டீ கிளாஸை வீசிய ஆசிரியை-பார்வை பறி போனது!
பாளையங்கோட்டை அருகேயுள்ள மணப்படைவீட்டை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி முப்புடாதி. இவர்களுக்கு பேச்சியம்மாள், சுடலி என்ற மகள்களும், சுடலைமணி என்ற மகளும் உள்ளனர்.
சுடலி அங்குள்ள டிடிடிஏ துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு வகுப்பு ஆரிசியை விஜயகுமாரி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது சுடலி பாடத்தை சரியாக கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த ஆசிரியை தனது கையில் வைத்திருந்த டீ டம்பளரை சில்வர் கிளாஸ் சுடலியை நோக்கி வீசினார். இதில் அந்த டம்பளர் அவரின் இடது கண்ணில் பட்டு கீழே விழுந்தது.
இதனால் கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் சுடலி மயங்கி விழுந்தார். இதனால் பதறி துடித்த ஆசிரியை உடனடியாக அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்தார். பின்னர் மாணவி சுடலியை சிறிது நேரம் பள்ளியில் வைத்து விட்டு உனது பெற்றோரிடம் இதுகுறித்து எதுவும் சொல்லவேண்டாம் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
சுடலியின் கண் கலங்கியிருப்பதை பார்த்த முப்புடாதி, அவளிடம் இது குறித்து கேட்டார். அப்போது சுடலி நடந்த விவரங்களை கூறினார். இதையடுத்து முப்புடாதி தனது மகளை அழைத்து கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியை விஜயகுமாரியிடம் கேட்டார். அப்போது அவர் தெரியாமல் நடந்து விட்டது. எனது கணவர் சித்த மருத்துவர்தான், அவரிடம் சென்று காண்பித்தால் குணமாகிவிடும் என்று கூறி சுடலியை அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.
சிறிது நாளில் சுடலிக்கு இடது கண் பார்வை மங்கியது. இதையடுத்து அவரை நெல்லையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு சுடலியை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இடது கண்ணில் உள்ள நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அனுப்பி விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சுடலியை அழைத்து கொண்டு இன்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகம் வந்து ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுக் கொடுத்தார்.
மாணவியின் தாய் முப்புடாதி இதுகுறித்துக் கூறுகையில், எனது மகள் பாடத்தை கவனிக்கவில்லை என்பதற்காக அவள் மீது ஆசிரியை விஜயகுமாரி டீ டம்பளரை வீசி எறிந்துள்ளார். மேலும் கண் மருத்துவரிடம் காட்டாமல் தனது கணவரை வைத்தே சிகிச்சை அளித்தார். அப்போதே தகுந்த கண் மருத்துவரிடம் காட்டியிருந்தால் எனது மகளின் கண் பார்வை பறிபோயிருக்காது.
நான் ஆசிரியையிடம் கேட்டபோது நீங்கள் போலீசில் புகார் செய்ய கூடாது. மீறி புகார் செய்தால் நடப்பதே வேறு என்று கூறி மிரட்டுகிறார். எனது மகளின் கண் பார்வை பறிபோக காரணமாக இருந்த ஆசிரியை விஜயகுமாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து சிறுமி சுடலி கூறுகையில், ஆசிரியை என் மீது டம்பளரை வீசினார். இதில் இடது கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது. நான் அழுது கொண்டே மயங்கி விட்டேன். வீட்டில் வந்து அம்மாவிடம் சொன்னேன். இப்போது எனக்கு இடது கண் தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.