விஜயகாந்த் குழப்பவாதி- டி.ராஜேந்தர் டென்ஷன்!
திருச்சி: தான் என்ன முடிவு எடுக்கிறோம் என்பதே விஜயகாந்த்துக்குத் தெரியவில்லை. அவர் ஒரு குழப்பவாதி என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
திருச்சி வந்த விஜய.டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், 2011ம் ஆண்டு தேமுதிக ஆட்சியை பிடிக்கும். நான் தான் முதல்வர் என்று விஜயகாந்த் கூறி வருகிறார்.
எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று மூன்று முதல்வர்களை பார்த்தவன் நான். அவர்களுடன் அரசியல் களத்தில் ஈடுபட்டவன். எம்.ஜி.ஆர் கூட தன்னை ஒரு போதும் எதிர்கால முதல்வர் என்று கூறியது இல்லை.
மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர் விஜயகாந்த். விஜயகாந்த் ஒரு குழப்பவாதி. தான் என்ன முடிவு எடுக்கிறோம் என்று அவருக்கே தெரியாது. விஜயகாந்த்தின் முகத்திரையை தமிழகம் முழுக்க கிழிக்கப்போகிறேன்.
முதல்வர் கருணாநிதிக்கு யாரை எப்போது கூட்டணியில் வைப்பது, கழட்டி விடுவது என தெளிவாக தெரியும். தற்போது ஒரு கட்சியை கழட்டி விட்டிருக்கிறார். அடுத்து, யாரை சேர்த்துக் கொள்ளப் போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம் என்றார் ராஜேந்தர்.