சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேன் படுகொலை
சென்னை: சென்னை வடபழனியில், அடுக்குமாடிக் குடியிருப்பில், காவலாளி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் பிரணவ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 18 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு காவலாளியாக இருப்பவர் பெரியசாமி (64). இவர் ராணி அண்ணாநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர்.
பெரியசாமி பிரணவ் குடியிருப்பிலேயே தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். ராணி அண்ணாநகர் வீட்டில் பெரியசாமியின் மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு பெரிய சாமி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த குடியிருப்பை சேர்ந்த 2 வாலிபர்கள் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில், வேலை பார்க்கின்றனர். இருவரும் நேற்று படம் பார்த்து விட்டு இரவு 1.15 மணிக்கு வந்தனர். அவர்களுக்கு பெரியசாமி கதவை திறந்து விட்டார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை குடியிருப்பைச் சேர்ந்த ஒரு பெண் நாயுடன், நடை பயிற்சி மேற்கொள்வதற்காக கீழே வந்தார். அப்போது காவலாளி பெரியசாமி படுக்கையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதைப் பார்த்து அந்த பெண் அதிர்ச்சியில் அலறினார்.
அனைவரும் ஓடி வந்து பார்த்தபோது பெரியசாமி படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. போலீஸாருக்குத் தகவல் போனது.
பெரியசாமியின் தலையில் வெட்டுக்காயம் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து ஓடி 100 அடி சாலையில் சென்று நின்றது. கொலை நடந்த இடத்தில் இருந்து ரத்தம் படிந்த கல், பிளேடு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
எந்தப் பொருளும் கொள்ளை போகாததால், கொள்ளையடிக்கும் நோக்கில்நடந்த கொலை அல்ல என்று தெரிய வந்துள்ளது. எனவே முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
நகரின் மையப் பகுதியல் இக்கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications