கவுன்சிலிங்கிலிருந்து விலகிய 11,000 மாணவர்கள்!
சென்னை: சுய நிதி பொறியியல் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பணம் கொடுத்து சேர்ந்த 11,000 மாணவர்கள், அரசு ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளனர்.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒன்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்துகிறது. இந்த ஆண்டு கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதையடுத்து 1,38,855 மாணவ- மாணவிகள் விண்ணப்பங்கள் பெற்று சென்றனர். இதில் 1,27,899 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
இதில் 1,17,774 பேர் பிளஸ் டூ முடித்த பொது மாணவ, மாணவியர், 4,918 பேர் தொழிற்கல்வி முடித்தவர்கள், 5,207 பேர் வெளி மாநில மாணவர்கள்.
இதில், விண்ணப்பம் பெற்றவர்களில் 10,956 மாணவ- மாணவிகள் என்ஜினீயரிங் சீட்'டுக்கு விண்ணப்பிக்கவில்லை. இதில் பெரும்பாலானவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங்கை அவர்கள் தவிர்த்து விட்டு சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெறச் சென்றுவிட்டதாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டை விட அரசு கல்லூரிகளின் எண்ணிக்கையும் சீட்'களும் கூடிவிட்டன. மேலும் புதிய சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் பல தொடங்கி இருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட்' கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு 10,000 என்ஜினீயரிங் இடங்கள் காலியாக கிடந்தன. இந்த ஆண்டு அனைத்து இடங்களிலும் பூர்த்தியாகக் கூடிய வாய்ப்புள்ளது.
ரேங்க் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. இதையடுத்து கவுன்சிலிங் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications