'கற்பனையாய் பேசும் ஜெ': ராயல் கேபிள் விஷன்
சென்னை: ராயல் கேபிள் விஷன் நிறுவனம் குறித்து மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் கற்பனையான புகார்களை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மு.க.அழகிரி தொடங்கியுள்ள நிறுவனம்தான் ராயல் கேபிள் விஷன். இந்த நிறுவனத்தின் பிடியில் சிக்கி மதுரை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்களும், மக்களும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ராயல் கேபிள் விஷன் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தவறுதலாக, உண்மைக்கு புறம்பாக ராயல் கேபிள் விஷன் சேவை குறித்து மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் சில பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்துள்ளார். இது உண்மைக்கு புறம்பான, கற்பனையான குற்றச்சாட்டாகும்.
கடந்த 9-6-2008 அன்று தொடங்கப்பட்ட ராயல் கேபிள்விஷன் என்னும் நிறுவனம் பொது மக்களுக்கும், கேபிள் ஆபரேட்டர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் உயரிய தொழில் நுட்ப சேவையை வழங்கிட வேண்டும் என்னும் நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
எங்களை விரும்பி, அணுகி தாங்களாகவே இணைத்துக் கொண்ட ஹெட் எண்ட்' மற்றும் லிங்க்' ஆபரேட்டர்களுக்குத்தான் எங்களது சேவை தொடருகிறது. சன் கட்டண சேனல்களை பொறுத்தவரை சட்டப்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டு இறுதி வெற்றி பெறுவோம்.
இது ஆர்.சி.வி. மற்றும் எஸ்.சி.வி. என்னும் இரு வணிக நிறுவனங்களுக்கிடையே நடக்கும் நிகழ்ச்சியே அன்றி இதில் அரசுக்கோ, அரசு கேபிள் நிறுவனத்திற்கோ யாதொரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications