'கிரீமி லேயர்': வருமான உச்சவரம்பு பரிந்துரை அறிக்கை தாக்கல் ஒத்திவைப்பு!
டெல்லி: கிரீமி லேயர் பிரிவுக்கான வருமான உச்சவரம்பை உயர்த்தும் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்வது திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில், கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்த பிரிவினரை சேர்க்கக் கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதையடுத்து தற்போது கிரீமி லேயர் பிரிவினரின் வருமான உச்சவரம்பாக ரூ. 2.5 லட்சம் என்று இருப்பதை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து தேசிய பிற்பட்டோர் ஆணையத்தை இதுதொடர்பாக பரிந்துரைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, மாநில பிற்பட்டோர் ஆணையங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்ைத அறிந்து பரிந்துரை அறிக்கையை உருவாக்கியுள்ளது.
அதன்படி ரூ. 4 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஆண்டு வருமான உச்சவரம்பை உயர்த்தலாம் என தேசிய பிற்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இன்று மத்திய சமூக நீதித்துறைக்கான அமைச்சர் மீரா குமாரிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அமைச்சர் மீரா குமார் பிசியாக இருப்பதாக ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டதால் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட மாட்டாது என ஆணையம் தெரிவித்துள்ளது.
அதற்குப் பதில் ஜூலை 1ம் தேதி அறிக்கை அமைச்சரிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications