அடுத்த வாரம் கருணாநிதி டெல்லி பயணம்
சென்னை: கூட்டணி முறிவைத் தொடர்ந்து இது அணிமாறும் சீஸன் அல்லவா... பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் 50 பேர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கோபாலபுர இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த, பாமக விழுப்புரம் மேற்கு மாவட்டத் துணைத் தலைவர் சு.பெரியண்ணன், விழுப்புரம் நகர்மன்ற உறுப்பினர் ரகுபதி, கண்டமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மணி, சின்னசேலம், மயிலம், கண்டமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பாமக கிளைச் செயலர்கள் என 50 பேர் திமுகவில் இணைந்தனர்.
இந் நிகழ்ச்சியின்போது நிருபர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்கள்:
கேள்வி: பாமகவினர் திமுவை நோக்கி வை நாடி வர ஆரம்பித்துள்ளனரே?
பதில்: அவர்களை வரவேற்கிறேன். திமுக மீது நம்பிக்கை வைத்துள்ளதால் அவர்கள் இணைகின்றனர்.
கேள்வி: அணுசக்தி ஒப்பந்தம் விஷயத்தில் இடதுசாரிகளால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதே?. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசுவீர்களா?
பதில்: அவர்களுடன் தினமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அடுத்த மாதம் முதல் வாரத்தில் டெல்லி செல்லவிருக்கிறேன். இன்னும் தேதி முடிவாகவில்லை. டெல்லியில் அவர்களை நேரில் சந்தித்து பேசுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications