ஜூலை 2ம் தேதி முதல் லாரிகள் ஓடாது: சம்மேளனம் அறிவிப்பு
நாமக்கல்: டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஜூலை 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
டீசல் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும், பழைய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத் தடைகளை அமைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 2ம்தேதி முதல் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இப்போராட்டத்திற்கு தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாமக்கல்லில் சம்மேளனத் தலைவர் செங்கோடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஆவண செய்வதாக உறுதியளித்தனர். இதனால் அகிலஇந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு மட்டும் போராட்டத்திலிருந்து விலகியுள்ளது. இருப்பினும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடுவதில் உறுதியாக உள்ளது.
எனவே அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்தபடி ஜூலை 2ம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கும். தமிழகத்திலும் இந்தப் போராட்டம் தொடங்குகிறது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நாளை நடைபெறவுள்ளது. போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அப்போது ஆலோசனை செய்யவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications