கருணாநிதியுடன் காங். தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு
சென்னை: விரைவில் பதவியிலிருந்து தூக்கப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் கருணாநிதி நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் கிருஷ்ணசாமிக்கு எதிராக அதிருப்தி வலுத்துவருகிறது. இதையடுத்து விரைவில் அவர் மாற்றப்படவுள்ளதாக பலமாக பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் டெல்லி சென்றிருந்த கிருஷ்ணசாமி, கடும் முயற்சிக்குப் பிறகே கட்சித் தலைவர் சோனியாவை சந்திக்க முடிந்தது.
இந்த நிலையில் டெல்லியிலிருந்து திரும்பிய கிருஷ்ணசாமி நேற்று திடீரென முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட கால் மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
தனது பதவியை காப்பாற்றக் கோரி முதல்வரை கிருஷ்ணசாமி சந்தித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இது வழக்கமான சந்திப்புதான் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், இது அரசியல் ரீதியிலான, வழக்கமான சந்திப்புதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வலுவாகவே உள்ளது. திடீர் தேர்தல்வந்தாலும் கூட எங்களது கூட்டணியே வெல்லும்.
தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்த முடிவை எடுக்க வேண்டியவர் கட்சித் தலைவர் சோனியா காந்திதான்.
தமிழக திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்து விட்டேன். இப்போது எதுவும் கூற முடியாது என்றார்.