அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி - 70 பேர் காயம்
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாம் மாநிலம், பாஸ்கா மாவட்டம் தமுல்பூர் அருகே உள்ள கிராமத்தில் உள்ள வாரச்சந்தையில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
இங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் பிற்பகல் ஒன்றரை மணியளவில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிளில் குண்டு வெடித்தது. இதையடுத்து அந்த இடமே பெரும் போர்க்களம் போல ஆனது.
பலர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழநதனர். மேலும் 4 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தனர். 12 சிறுவர், சிறுமியர் உள்பட 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவர்களில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், குவஹாத்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
உடனடியாக விரைந்த போலீஸார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து சீல் வைத்தனர். அப்போது வெடிக்காத நிலையில் இருந்த ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
குண்டுவெடிப்புக்கு உல்பா தீவிரவாதிகளே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications