ரத்தம் கசியும் இயேசு ஓவியம்-சர்ச்சில் குவிந்த மக்கள் கூட்டம்!
மும்பை: மும்பை, மாஹிம் பகுதியில் உள்ள பிரபல செயின்ட் மைக்கேல்ஸ், சர்ச்சில் உள்ள இயேசு கிறிஸ்துவின் ஓவியத்திலிருந்து ரத்தம் கசிவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர்.
மாஹிம் சர்ச் என்று செயின்ட் மைக்கேல்ஸ் சர்ச் அழைக்கப்படுகிறது. இந்த சர்ச்சில் உள்ள இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தில் ரத்தம் கசிவதை வெள்ளிக்கிழமை சிலர் பார்த்தனர். இதையடுத்து தகவல் அதி வேகமாக பரவியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர்.
ஓவியத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவின் நெஞ்சுப் பகுதியிலிருந்து துளி துளியாக ரத்தம் காணப்படுகிறது. இது ஒரு அற்புத செயல் என பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டாக்சி டிரைவர் கன்ஹயா லால் சர்மா கூறுகையில், எனது டாக்சியில் சில பக்தர்கள் இங்கு வந்தனர். இயேசு படம் முன்பு பொருத்தி வைக்க அவர்களுக்கு மெழுகுவர்த்தி கிடைக்கவில்லை. இதையடுத்து தாதர் வரை சென்று வாங்கி வந்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விட்டதால் இங்குள்ள கடைகளில் வழிபாடு நடத்தத் தேவையான மெழுகுவர்த்திகள் கிடைக்கவில்லை என்றார்.
ஜோசப் டிசவுசா என்பவர் கூறுகையில், இது நிச்சயம் ஒரு அற்புதமான செயல்தான். கடவுள் நம்மிடம் எதையோ சொல்ல விரும்புவதையே இது உணர்த்துகிறது. இதை மக்கள் உணர வேண்டும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது அற்புதமான செயலாக தோன்றுகிறது. மற்றவர்களுக்கு எப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை. அதுகுறித்து நம்பிக்கையாளர்களான எங்களுக்கு கவலை இல்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்து மும்பை ஆர்ச்பிஷப் கார்டினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கூறுகையில், இதுகுறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது அற்புதச் செயலா என்பது குறித்து விரிவான ஆய்வுக்குப் பின்னரே கூற முடியும் என்றார்.
கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி விநாயகர் சிலைகள் பால் குடிப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் விநாயகர் சிலைகளுக்கு பால் கொடுத்து பரவசம் அடைந்தனர். ஆனால்,இதற்கு பரப்பு இழுவிசையே காரணம் என பின்னர் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தினர்.
அதேபோல மாஹிம் கடல் நீர் சுவையானதாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து பாட்டில் பாட்டிலாக தண்ணீரை எடுத்துச் சென்றனர். ஆனால் தொடர் மழை காரணமாக கடல் நீரின் உவர்ப்புத் தன்மை மாறியதே இதற்குக் காரணம் என மறுபடியும் விஞ்ஞானிகள் விளக்கினர்.
இந்த நிலையில், இயேசுவின் படத்திலிருந்து ரத்தம் வெளியாகியுள்ள செய்தி மும்பையில் மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications