அணு சக்தி ஒப்பந்தம் திட்டமிட்டபடி நிறைவேறும்: பிரதமர்
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தத்திற்கு நாடு முழுவதும் நல்ல ஆதரவு உள்ளது. இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 15 நாட்களாக பலத்த இழுபறி நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது மெளனத்ைதக் கலைத்தார்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்துள்ள அவர், ஒப்பந்தம் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தை நாடத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
உலக தட்பவெப்ப மாற்றம் குறித்த தேசிய திட்ட அறிக்கையை இன்று பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் வெளியிட்டார். பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக என்.எஸ்.ஜி மற்றும் சர்வதேச அணு சக்தி கவுன்சிலிடம் பேச எங்களை அனுமதிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதுதான் அரசின் ஒரே விருப்பம், கோரிக்கை.
இதுதொடர்பாக இடதுசாரிகளின் சந்தேகங்களைப் போக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அணு சக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ஆட்சி கவிழும் நிலை உருவானால் அதை சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன். அனைத்துத் தரப்பினருக்கும் திருப்தி தரும் வகையிலான தீர்வுக்கு வழி உள்ளதாகவே இன்னும் நான் நினைக்கிறேன்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான நடைமுறைகளை முடிக்க எங்களை அனுமதிக்குமாறு மீண்டும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதன் பின்னர் அதை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதை அனைவரும் உணர வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.
இதற்கிடையே, ஜூலை 7ம் தேதி சர்வதேச அணு சக்தி கவுன்சில் கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்லவுள்ளதாக திட்டத்தில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications