பி.இ. கவுன்சிலிங் 3ம் தேதி தொடக்கம்-11ம் தேதி பொது கவுன்சிலிங்
சென்னை: பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வுக் கூட்ட (கவுன்சிலிங்) விவர அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஜூலை 3ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்குகிறது.
கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மட்டும் நடக்கிறது. வெளியூர்களிலிருந்து கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கும், அவர்களுடன் வரும் ஒருவருக்கும் பஸ் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும்.
கவுன்சிலிங் குறித்த முழு அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஜூலை 3ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது.
அன்றைய தினம், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. பொதுப்பிரிவிற்கான கவுன்சிலிங் ஜூலை 11ம் தேதி துவங்குகிறது.
பி.இ., பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்தனர். இதில், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 875 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
விளையாட்டு வீரர்கள் பிரிவில், அண்ணா பல்கலைக் கழகத்தில், 12 இடங்களும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 88 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில், இரண்டாயிரத்து 517 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் சான்றிதழ் சரிபார்த்தல் பணிகள் நடக்கின்றன.
தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. தொழிற்கல்வி மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், நூறு இடங்களும், தனியார் பொறியியல் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கும் இடங்களில், நான்கு சதவீத இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில், நான்காயிரத்து 930 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஜூலை 4ம் தேதி காலை 9:30 மணிக்கு தொழிற்கல்வி மாணவர் பிரிவில் உள்ள உடல் ஊனமுற்றவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அன்று 191 மதிப்பெண் வரையும், 5ம் தேதி 182.33 மதிப்பெண் வரையும், 6ம் தேதி 173.33 மதிப்பெண் வரையும், 7ம் தேதி 164.17 மதிப்பெண் வரையும், 8ம் தேதி 157 மதிப்பெண் வரையும் பெற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
வெளிமாநில மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜூலை 9ம் தேதி நடக்கிறது. வெளிமாநில மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக் கழகத்தில் 52 இடங்களும், காரைக்குடி மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில், ஐந்து இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் 3,575 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு ஒற்றைச் சாளர கவுன்சிலிங்கில் உள்ள இடங்களில், மூன்று சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இப்பிரிவில், 359 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடங்களுக்கான பிரிவில் ஆயிரத்து 743 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இப்பிரிவில், அண்ணா பல்கலைக் கழகத்தில், 8 இடங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 34 இடங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் 108 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுப்பிரிவில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 370 மாணர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு கவுன்சிலிங் ஜூலை 11ம் தேதி துவங்குகிறது.
ஜூலை 11ம் தேதி 199 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications