நாளை முதல் லாரிகள் வேலை நிறுத்தம்-காய்கறி, கேஸ் தட்டுப்பாடு வரும்
சேலம்: நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தேசிய அளவிலான லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. இதில் தென் மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சம் லாரிகளும் பங்கேற்கவுள்ளதால் காய்கறி, சமையல் கேஸ், உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளது.
பழைய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை நீக்க வேண்டும், புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் சுங்க வரியை நிர்ணயிக்க லாரி உரிமையாளர்களையும் உள்ளடக்கிய குழு அமைக்க வேண்டும்,
லாரி வாடகை மீதான 12.5 சதவீத சேவை வரியை ரத்து செய்ய வேண்டும், சாதாரண டீசல் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நாடு தழுவிய போராட்டம் நடக்கிறது.
நாளை (1ம் தேதி) நள்ளிரவு முதல் இந்த போராட்டம் தொடங்குகிறது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த சம்மேளத்தின் ஆலோசனை கூட்டம் சேலத்தில் தலைவர் பி.செங்கோடன் தலைமையில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகியவை ஸ்பீட் டீசல் என்ற பெயரில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தி, அதைத் தான் போட வேண்டும் என லாரி உரிமையாளர்களை கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் தென் இந்தியாவில் செயற்கையான தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி வருகின்னர்.
ஆகவே பெட்ரோலிய துறை அமைச்சர் தலையிட்டு சாதாரண டீசல் அரசு நிர்ணயித்த விலையில் கிடைக்கவும், தட்டுப்பாடின்றி கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு முழு ஆதரவு அளிக்கிறது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனால் நாளை நள்ளிரவு முதல் தென் மாநிலங்களில் மட்டும் 5 லட்சம் லாரிகள் இயங்காது. இதில் 1.5 லட்சம் லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை.
இதன் மூலம் தினமும் ரூ.150 கோடி இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. லாரி தொழிலில் நேரடியாக 15 லட்சம் பேரும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளார்கள். வேலை நிறுத்தத்தால் இந்த 25 லட்சம் பேரும் பாதிக்கப்படவுள்ளனர்.
மேலும் இந்த வேலை நிறுத்தத்துக்கு சதர்ன் லாரி உரிமையாளர்கள் நல சங்கமு ஆதரவு தந்துள்ளதால் அரை பாடி (டிப்பர் லாரிகள்) லாரிகளான மணல் லாரிகள், ஜல்லி லாரிகள் மற்றும் செங்கல் லாரிகளும் ஓடாது.
இதனால் கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications