மக்கள் ஆத்திரம்-'பங்கு'களில் போலீஸ் குவிப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் பெரும்பாலான பங்குகள் மூடிக்கிடக்கின்றன. பெட்ரோல், டீசல் விற்பனை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் கோபத்துடன் அலைந்து திரிகின்றனர். அசம்பாவிதத்தைத் தவிர்க்க பெட்ரோல் பங்குகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை தொடங்கிய பெட்ரோல், டீசல் பயங்கரம் இன்றும் சென்னையை ஆட்டிப்படைத்து வருகிறது. நேற்றாவது ஓரிரு பங்குகள் திறந்திருந்தன. இன்று பெரும்பாலான பங்குகள் மூடிக் கிடக்கின்றன. பங்குகளுக்கு முன்பு கயிற்றைக்கட்டி ஸ்டாக் இல்லை என்ற போர்டை வைத்துள்ளனர்.
திறந்திருக்கும் சொற்ப பங்குகளிலும் கூட அளவாகத்தான் பெட்ரோல், டீசல் தருகின்றனர். இன்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் பிடித்துச் செல்கின்றனர்.
பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் ஏரியா, ஏரியாவாக அலைந்து திரிவது பார்க்கவே மிகக் கொடுமையாக உள்ளது. பல இடங்களில் வண்டிகளைத் தள்ளிக் கொண்டு செல்லும் காட்சியும் சகஜமாக காணப்படுகிறது.
பல இடங்களில் ஏற்கனவே பெருமளவிலான பெட்ரோல், டீசலை வாங்கிப் பதுக்கி விட்ட சிலர் அதை பல மடங்கு விலை வைத்து விற்பதையும் காண முடிகிறது. குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில்தான் இந்த கள்ளச்சந்தை வியாபாரம் களை கட்டியுள்ளது.
திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், எம்எம்டிஏ காலனி, கோயம்பேடு, புரசைவாக்கம், அசோக்நகர், ராயப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி, எழும்பூர், அயனாவரம், வடபழனி, பிராட்வே, ராயபுரம் உள்பட பல பகுதிகளில் பல இடங்களில் பங்குகள் மூடிக்கிடக்கின்றன.
பெட்ரோல், டீசல் கிடைக்காமல் அவதியுற்றுள்ள மக்கள் கொந்தளிப்புடன் காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்ைகயாக அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியப் பகுதிகளில் உதவி ஆணையர்கள் தலைமையில் போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications