எனக்கு மட்டும் ரூல்ஸ் பார்ப்பார்- விஜய்காந்த்
விழுப்புரம்: விலைவாசி குறையும் வரை ரேசன் கார்டுகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப நல நிதியாக ரூ. 500 வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் ரயில் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,
என்னை தொண்டர்கள் தான் பாதுகாத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு 500 போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர். இதே கருணாநிதி வந்தால், 10,000 போலீஸ் போடுவர். எனக்கு மட்டும் ரூல்ஸ் பார்ப்பர்.
கடலூர் மகளிர் மாநாட்டில் திமுகவினர் அக்கப்போர் செய்தனர். அது என்ன தமிழக அரசு மகளிர் மாநாடா? அரசு மருத்துவமனையில் 50 ரூபா லஞ்சம். நம்மிடம் வரிப்பணம் வசூலித்து, நம்மிடமே லஞ்சம் கேட்குமளவிற்கு நாடு சுடுகாடாகிவிட்டது.
விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம். நாம் என்ன செய்வது என்று முதல்வர் கூறுகிறார். கூட்டணியில் கூட இருந்தே குழி பறிக்கிறார்.
பண வீக்கம் 11.42 சதவீதம் உயர்ந்துள்ளது. பவர், சூப்பர் என்று சொல்லி பெட்ரோலுக்கு கூடுதலாக ரூ.5 கொடுக்க வேண்டியுள்ளது.
இதையெல்லாம் சமாளிக்க ரேஷன் கார்டுக்கு குடும்ப நிதியாக ரூ.500 கொடுக்க வேண்டும். இலவச டிவி கொடுப்பது போல், குடும்ப நிதியையும் கொடுக்க வேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு தினந்தோறும் ரூ.50 செலவாகும். கருணாநிதி புத்திசாலி, அதனால் தான் இரண்டு ரூபாய்க்கி அரிசியும் இதர செலவில் ரூ.48யையும் பிடுங்குகிறார்.
கருணாநிதி தமிழனுக்கும், தமிழகத்திற்கும் துரோகம் செய்துவிட்டார். 1981ல் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டு கொடுத்தார். 98ல் ஒகேனக்கல் திட்டத்தை விட்டுக் கொடுத்தார்.
மீண்டும் சொல்கிறேன், தேமுதிக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடுதேடி வரும். அணுசக்தி ஒப்பந்தத்தை கூறி, விலைவாசி உயர்வு பிரச்னையை திசை திருப்புகின்றனர்.
இரண்டு கட்சிகளுக்கும் மாறி, மாறி ஓட்டு போட்டு கெடுத்திட்டீங்க. இனிமேலும் அவங்களுக்கு ஓட்டு போட போறீங்களா என்றார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications