பிபிசிஎல் கப்பல் சென்னை வந்தது - டீசல் பற்றாக்குறை நீங்கியது
சென்னை: சென்னை நகருக்கு பிபிசிஎல்லின் எண்ணை கப்பல் நேற்று வந்து சேர்ந்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு டீசல் சப்ளை முழு வீச்சில் தொடங்கியது.
கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் மக்கள் பெரும் அவதிப்பட்டு விட்டனர். பெட்ரோல், டீசல் இல்லாமல் அவர்கள் பட்ட பாடு பெரும் சோகம்.
இதற்கெல்லாம் காரணம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எண்ணை கப்பல் வந்து சேராததே என்று கூறப்பட்டது. இந்தக் கப்பல் நேற்று காலைதான் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி எண்ணை ஏற்றிக் கொண்டு வந்த சம்பூர்ண ஸ்வராஜ்யா என்ற பெயர் கொண்ட அக்கப்பல் நேற்று வந்தது சேர்ந்து. இதையடுத்து கப்பலிலிருந்து டீசலை எண்ணை நிறுவனங்களின் கிட்டங்கிகளுக்கு மாற்றும் வேலை தொடங்கியது.
துறைமுகத்திலிருந்து, தண்டையார்பேட்டையில் உள்ள பிபிசிஎல்லின் ஆயில் டெர்மினலுக்கு குழாய்கள் வழியாக டீசல் அனுப்பப்பட்டது. ஹை ஸ்பீட் மற்றும் சாதாரண வகை டீசல் தற்போது வந்துள்ளது. இவை ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்டு விட்டதால் மறுபடியும் அந்த வேலையைச் செய்ய வேண்டிய நிலை இல்லை.
எனவே பைப் லைன்கள் மூலம் ஆயில்டெர்மினலுக்கு வந்த டீசல் அப்படியே டேங்கர் லாரிகள் நிரப்பப்பட்டு பெட்ரோல் பங்குகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் மூலம் டீசல் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி பிரச்சினை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications