1080 ராமேஸ்வரம் மீனவர்களை கடத்தி 1076 பேரை விடுவித்தது இலங்கை

தமிழக மீனவர்களை தொட்டதற்கெல்லாம் அடிப்பதும், சுடுவதுமாக கொலை வெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இலங்கை கடற்படை தற்போது ஆயிரக்கணக்கான ராமேஸ்வரம் மீனவர்களை ஒட்டுமொத்தமாக சிறை பிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 270 படகுகளில் 1080 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். பிற்பகல் 3 மணியளவில் அவர்கள் கச்சத்தீவு அருகேமீன் பிடித்துக் கொண்டிருந்தபோது,அங்கு 40க்கும் மேற்பட்ட படகுகளில் இலங்கை கடற்படையினர் திரண்டு வந்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்த அவர்கள் படகுகளில் இறங்கி சோதனையிட்டனர். அப்போது பல மீனவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது உடமைகளும் சேதப்படுத்தப்பட்டது.
பின்னர் அனைத்துப் படகுகளையும் துப்பாக்கி முனையில், தலைமன்னாருக்கு கடற்படையினர் கொண்டு சென்றனர். 1080 மீனவர்களையும் சிறை பிடித்தனர்.
இரவு 8 மணியளவில்தான் ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்திற்கும், மண்டபத்தில் உள்ள கடலோரக் காவல் படை முகாமுக்கும் இதுகுறித்து தகவல் தந்துள்ளது இலங்கை கடற்படை.
மீனவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு முக்கியப் பொருட்களை கடத்தினரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், படகுகளில் சோதனை நடந்து வருவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்றுள்ளது ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் கடற்கரையில் மீனவர்களின் குடும்பத்தினர் திரண்டுள்ளனர். அனைவரும் கண்ணீரும், கம்பலையுமாக உள்ளனர்.
இந்த நிலையில் பிடித்துச் செல்லப்பட்ட 1076 மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்து விட்டதாகவும், 4 பேர் மட்டும் தலைமன்னார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட நான்கு மீனவர்களும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதனால் தங்கச்சி மடத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications