அணு ஒப்பந்தம்: அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் - காரத்
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக 7 ம் தேதிக்குள் அரசின் நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று கெடு விதித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இடதுசாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்தக் கடிதத்திற்கு இதுவரை பிரதமரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிபாசுவுடன் நேற்று பிரகாஷ் காரத், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யா, பொலிட்பீரோ உறுப்பினர் பீமன் போஸ் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சந்திப்புக்குப் பின்னர் அவர்களை செய்தியாளர்கள் சந்தித்து என்ன பேசினீர்கள் என்றுகேட்டபோது மூன்று பேரும் பதிலளிக்க மறுத்து விட்டனர்.
பின்னர் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற பிரகாஷ் காரத் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா பைப்லைன் எரிவாயுத் திட்டம் நிச்சயம் நிறைவேறாது. இதனால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
நமது ராணுவம், பாதுகாப்பு, போர் நடவடிக்கைகள், பொருளாதாரம், அணு சக்தி என அனைத்திலும் நாம் அமெரிக்காவுக்கு இணக்கமாக நடக்க வேண்டியிருக்கும்.
சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை இல்லாமல் போய் விடும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமக்கு அடுத்து 10 முதல் 15 ஆண்டுகளில் 40 ஆயிரம் மெகாவாட் அணு மின் சக்தி கிடைக்கும் என அரசு கூறுகிறது. இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் வெறும் 8 சதவீதம் மட்டுமே ஆகும் என்றார் காரத்.
பின்னர், மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்திற்குப் பதில்கிடைத்ததா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இதுவரை வரவில்லை. பிரணாப் முகர்ஜியின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றார் காரத்.
--