பாமக எம்.எல்.ஏவை பஸ்சிலிருந்து இறக்கி விட்ட கண்டக்டர்!
ராமநாதபுரம்: பாமக எம்.எல்.ஏவை டிக்கெட் எடுக்கச் சொல்லி வலியுறுத்தி பஸ்சிலிருந்து இறக்கி விட்ட கண்டக்டரை கண்டித்து ராமநாதபுரத்தில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தொகுதி பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி. இவர் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள பா.ம.க மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து மதுரை வரை ரயிலில் வந்தார். பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் செல்வதற்காக அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
தான் சட்டமன்ற உறுப்பினர் என்றும் தனக்கு அரசு இலவச பயண அட்டை வழங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். ஆனால் அந்த பேருந்தின் நடத்துனர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக டிக்கெட் எடுத்தாக வேண்டும் என்று கூறினார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் எம்.எல்.ஏ வை டிக்கெட் எடுக்காவிட்டால் நடுவழியில் கீழே இறக்கி விட்டு விடுவேன் என நடத்துனர் சொன்னதாக தெரிகிறது.
சட்டமன்ற உறுப்பினர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் டிக்கெட் எடுக்காவிட்டால் பேருந்தை எடுக்க மாட்டேன் என்று நடுவழியில் பேருந்தை நிறுத்தி விட்டார். வேறு வழியின்றி சட்டமன்ற உறுப்பினர் டிக்கெட் எடுத்து அதே பேருந்தில் ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.
தகவலறிந்த பா.ம.க வினர் ராமநாதபுரத்தில் சட்டமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு தங்களை பழிவாங்குவதாக கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை செயலாளர் சகுபர் சாதிக் தலைமை வகித்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் பா.ம.கவினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கொடுத்த உறுதிமொழியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து எம்.எல்.ஏ மூர்த்தி கூறுகையில், நான் சட்டமன்ற உறுப்பினர். எனக்கு இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கூறியும் நடத்துனர் அதனை ஏற்க மறுத்து பாதி வழியில் என்னை இறங்க சொன்னார். நான் வேறு வழியின்றி டிக்கெட் எடுத்து விட்டேன். எங்களை அவமானப்படுத்துவதற்காகவே இது நடந்ததாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.