காபூல்: பலியான 4 இந்தியர்களின் உடல்களும் டெல்லி வருகை
டெல்லி: காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மீதான மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பலியான நான்கு இந்தியர்களின் உடல்களும் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தினர். இதில் 41 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தில் பலியானவர்களில் 4 பேர் இந்தியர்கள் ஆவர். இந்திய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பிரிகேடியர் ஆர்.டி.மேத்தா, ஐஎப்எஸ் அதிகாரி வெங்கடேஸ்வர ராவ், இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் அஜெய் பதானியா மற்றும் ரூப்சிங் ஆகியோர் பலியான இந்தியர்கள் ஆவர்.
இவர்களது உடல்கள் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. உடல்களுடன் அவர்களது குடும்பத்தினரும் உடன் வந்தனர்.
அமெரிக்கா கண்டனம்:
இதற்கிடையே, காபூல் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்ட் கூறுகையில், இந்த சம்பவத்தால் இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படும். தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னும் வேகமடையும்.
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தழைக்க அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
காபூலில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த இந்த பயங்கர தாக்குதல் சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முல்போர்ட்.












Click it and Unblock the Notifications