இடதுசாரிகள் ஆதரவு வாபஸானது: அரசை கவிழ்க்க பாஜக-இடதுசாரிகள் கூட்டணி

நாளை இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியிடம் இடதுசாரிகள் வழங்கவுள்ளனர்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று டெல்லியில் நடைபெற்ற இடதுசாரிகளின் அவசர கூட்டத்திற்குப் பி்ன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அறிவித்தார்.
முன்னதாக 10ம் தேதி தான் ஆதரவை வாபஸ் பெறப் போவதாக இடதுசாரிகள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விஷயத்தில் இறுதி முடிவெடுக்க இடதுசாரி தலைவர்களின் அவசர கூட்டம் டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம் நிலைமையின் தீவிரம் உணர்ந்து முன்கூட்டியே நடத்தப்பட்டது.
உடனடி வாபஸ்:
இக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவவிரத பிஸ்வாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் ஒரு கூட்டத்தைக் கூட்ட அரசு நினைக்கிறது.
ஆனால், எங்களுக்கு முகர்ஜி அளித்துள்ள பதிலும், பிரதமரின் அறிவிப்பும் முற்றிலும் நேர் மாறாக உள்ளது. எங்களை பிரதமர் கேலிக்குரியவர்களாக மாற்றி விட்டார். கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் நடந்திருக்கிறார். அணு சக்தி ஏஜென்சியை அணுக முடிவு செய்து விட்ட பின்னர் எங்களுடன் ஏன் பேச அவர்கள் நினைக்கிறாரக்ள் என்று தெரியவில்லை என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பரதன் கூறுகையில், சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கு அவர்கள் போக முடிவு செய்து விட்டால் நாங்கள் ஆதரவை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
இந் நிலையில் இன்று தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.
நாளை வாபஸ் கடிதம்:
ஜனாதிபதி பிரதீபா பாட்டீலைச் சந்தித்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் கடிதத்தை நாளை அளிக்க இருப்பதாகவும் காரத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாளை நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்து கடிதம் கொடுக்க இருப்பதாகவும், இதற்காக ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு இடதுசாரி கட்சி தலைவர்கள் கேட்டுள்ளனர்.
ஆதரவை விலக்கிக் கொள்ளும் தங்களது முடிவு குறித்து கடிதம் மூலம் காங்கிரஸ் தலைமைக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
பாஜக-இடதுசாரிகள் கூட்டணி:
இந் நிலையில் மத்திய அரசு நம்பி்க்கை வாக்கெடுப்பு கோரினால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இடதுசாரிகளும் இணைந்து அதை எதிர்த்து வாக்களிக்கவுள்ளனர்.
இந்த விஷயத்தில் இடதுசாரிகள்-பாஜக இடையே புதிய கூட்டு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications