தேவாரம் பாடிய ஆறுமுகசாமி ஓதுவாரைத் தாக்கிய தீட்சிதர்கள்!

சிவ தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என ஓதுவார் ஆறுமுகசாமி நீண்ட காலமாக போராடி வந்தார். அவருடன் பல்வேறு தமிழ் அமைப்புகளும் போராடி வந்தன.
இந்தக் கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றமும் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதையடுத்து திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து ஆறுமுகசாமி ஓதுவார் தலைமையில் பலரும் அங்கு பாடச்சென்றபோது ஓதுவார்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டு பாட விடாமல் தடுத்தனர். இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து தீட்சிதர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வந்து போட்டு தேவாரம், திருவாசகம் பாட வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அதன் பின்னர் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தீட்சிதர்கள் இறங்கி வந்தனர். அதன் பின்னர் அமைதியான முறையில், தேவாரம், திருவாசகம் பாடுவது நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்நிலையில் சிதம்பரம் கோயிலில் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஓதுவார் ஆறுமுகசாமிக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தேவாரம் பாடச்சென்றபோது அங்கு இருந்த தீட்சிதர்கள் சிலர் சேர்ந்து அடித்து, உதைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஆறுமுகச்சாமி ஓதுவார் சிகிச்சை பெற்றார்.
இதுதொடர்பாக சிதம்பரம் காவல் நிலையத்தில் தீட்சிதர்கள் தன்னை தாக்கியதாக ஓதுவார் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த புதிய பிரச்சினையால் சிதம்பரத்தில் மீண்டும் பரபரப்பு திரும்பியுள்ளது.












Click it and Unblock the Notifications