மக்களுக்கு மத்திய அரசு துரோகம்: காரத்
டெல்லி: நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து விட்டது மத்திய அரசு என்று இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியிடம் வழங்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை போர்டு உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விட இந்தியா நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து போர்டு உறுப்பினர்களிடம் வரைவு ஒப்பந்த நகல் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் வரைவு ஒப்பந்த நகலில் உள்ளவை குறித்த சாராம்சத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதற்கு இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இடதுசாரி தலைவர்கள் பிரகாஷ் காரத், பரதன், பிஸ்வாஸ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
பிரகாஷ் காரத் பேசுகையில், நாட்டு மக்களுக்கு மன்மோகன் சிங் அரசு செய்துள்ள மிகப் பெரிய துரோகம் இது.
அணு சக்தி ஒப்பந்தத்தை எந்த வகையிலும் நிறைவேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அணு சக்தி ஒப்பந்தத்தை அனைத்து வழியிலும் நாங்கள் எதிர்ப்போம்.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியை அணுகுவதற்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை மத்திய அரசு மீறி விட்டது.
இதன் மூலம் இடதுசாரிகளுக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் கொடுத்த உறுதிமொழியை, நம்பகத்தன்மையை மத்திய அரசு இழந்து விட்டது. நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது.
வரைவு ஒப்பந்தம் ரகசியமானது, அரசில் சேர்ந்தால்தான் அதை காட்டுவோம் என்றெல்லாம் கூறி வந்தது மத்திய அரசு. ஆனால் நேற்றே பல அமெரிக்க இணையதளங்களில் அந்த வரைவு ஒப்பந்தம் வெளியிடப்பட்டு விட்டது.
மன்மோகன் சிங் அரசு சிறுபான்மை அரசாக மாறிய 24 மணி நேரத்திற்குள்ளாகவே அணு சக்தி ஏஜென்சியை மத்திய அரசு அணுகியுள்ளது.
நாட்டு மக்களை தயவு செய்து கேலிப் பொருட்களாகி விடாதீர்கள் என்று காங்கிரஸ் கட்சியிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார் காரத்.












Click it and Unblock the Notifications