குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்தார் மன்மோகன் சிங்

மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்று விட்டன. இதுதொடர்பாக நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் வழங்கின.
மேலும், பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன. பாஜகவும் இதே கோரிக்கையை எழுப்பி வருகிறது.
அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாக ஆளும் கூட்டணி வருகிற போதிலும் சமாஜ்வாடி கட்சி மட்டுமே இதுவரை தனது ஆதரவுக் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளது. மற்ற ஆதரவுக் கட்சிகள் குறித்து குழப்பமான நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில் தன்னை வந்து சந்திக்குமாறு பிரதமருக்கு, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியான செய்திக்குறிப்பில், நாட்டில்தற்போது உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிரதமரின் கருத்தை அறியும் பொருட்டு நாளை (இன்று) தன்னை வந்து சந்திக்கும்படி பிரதமரை குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் குடியரசுத் தலைவரை இன்று இரவு ஏழே முக்கால் மணியளவில் சந்தித்தார்.
அப்போது இடதுசாரிகள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதால் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம், நம்பிக்கை வாக்கு கோருவது உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.
லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர தனது அரசு தயாராக இருப்பதாகவும், தனது அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாகவும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
--












Click it and Unblock the Notifications