புதுவை மாஜி முதல்வரிடம் செல்போன் அபேஸ்!
புதுச்சேரி: சாராயக் கடை முன்பு காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கல்யாண மண்டபத்திற்குப் போய் விட்டு வந்த புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய விவசாயத்துறை அமைச்சருமான வைத்திலிங்கத்தின் செல்போனை சிலர் திருடிச் சென்றனர்.
கடந்த 8ம் தேதி அமைச்சர் வைத்திலிங்கம் டி. நகர் பகுதியில் உள்ள தமிழ் கல்யாண மண்டபத்தில் நடந்த கல்யாணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றார். காரை டிரைவர் ராமலிங்கம் ஓட்டினார்.
கல்யாண மண்டபத்திற்கு வந்ததும் காரை எதிர்புறம் உள்ள சாராயக்கடை அருகே நிறுத்தி விட்டு, கல்யாண மண்டபத்திற்குள் சென்றார் வைத்திலிங்கம். மறதியாக செல்போனை காருக்குள்ளேயே விட்டுச் சென்று விட்டார்.
கல்யாணம் முடிந்து காருக்குத் திரும்பியபோதுதான் செல்போன் இல்லாததை உணர்ந்து தேடிப் பார்த்தார். ஆனால் காரில் விட்டுச் சென்ற செல்போன் அங்கு இல்லை. சாராயக் கடைக்கு வந்த யாரேனும் செல்போனை திருடியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து இன்று டி.நகர் போலீஸ் நிலையத்தில் டிரைவர் ராமலிங்கம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்போனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications