போலீஸாரிடமிருந்து தப்பிய ரவுடி என்கெளன்டரில் சாவு
சென்னை: சென்னை காசிமேடு பகுதியில் இன்று அதிகாலை நடந்த போலீஸ் என்கெளன்டரில் பிரபல ரவுடி பாபா சுரேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வட சென்னையைச் சேர்ந்தவர் பாபா சுரேஷ். பிரபல ரவுடி. கொலை, கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என இவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நான்கு முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தவர்.
சில நாட்களுக்கு முன்பு இவரைக் கைது செய்த சுரேஷை போலீஸார் தங்களது கஸ்டடியில் வைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென சுரேஷ் தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் இன்று அதிகாலை காசிமேடு பகுதியில் என்கெளன்டரில் சுரேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில், சுரேஷ் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது மீன்பிடி துறைமுகத்தில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது தனது உடலில் வெடிகுண்டுகள் கட்டியிருப்பதாக மிரட்டியுள்ளார் சுரேஷ்.
அவரை சரணடைந்து விடுமாறு போலீஸார் கூறியும் கேட்கவில்லை. மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டையும் எடுத்து போலீஸார் மீது வீசியுள்ளார். அது வெடித்துச் சிதறியதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு போலீஸார் காயமடைந்தனர். ஒரு போலீஸ் ஜீப்பும் எரிந்து சாம்பலானது.
இதையடுத்து சுரேஷை போலீஸார் சுட்டு வீழ்த்தினர். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்தார்.