துபாய்-கப்பலிலிருந்து விழுந்து இந்திய மாலுமி சாவு
துபாய்: ஹம்ரியா துறைமுகத்தில் கப்பலில் பணியாற்றி வந்த இந்தியாவைச் சேர்ந்த மாலுமி ஜார்ஜ் என்பவர், கப்பலிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இறந்த ஜார்ஜுக்கு வயது 52. ஒரு சரக்குப் பெட்டியின் மீது பிளாஸ்டிக் பேப்பரை ஒட்டும் பணியில் ஜார்ஜும், இன்னொரு மாலுமியும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜார்ஜ் தவறி கடலில் விழுந்து விட்டார். இன்னொரு மாலுமி, பார்சலுக்கு அந்தப் பக்கம் இருந்ததால் ஜார்ஜ் விழுந்தது அவருக்குத் தெரியவில்லை. சத்தமே இல்லாததால், ஜார்ஜ் பெயரைச்சொல்லி அவர் கூப்பிட்டபடி அந்தப் பக்கம் வந்தபோதுதான் ஜார்ஜ் கடலில் விழுந்தது தெரிய வந்தது.
அவரது ஷூக்கள், கடலில் மிதந்து கொண்டிருந்தன. இதையடுத்து ஹம்ரியா துறைமுக மீட்புப் படை போலீஸாரை அவர் அழைத்தார். பின்னர் விரைந்து வந்த போலீஸார் ஜார்ஜின் உடலை மீட்டனர்.