22ம் தேதி லோக்சபாவில் மன்மோகன் அரசு பலப்பரீட்சை
டெல்லி: நம்பிக்கை வாக்கு கோருவதற்காக வரும் 21ம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறது. 22ம் தேதி நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்று விட்ட நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்தார்.
அப்போது, லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர தனது அரசு தயாராக இருப்பதாகவும், தனது அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் பிரதமர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. இதில் நம்பிக்கை வாக்கு கோருவதற்காக எப்போது லோக்சபாவை கூட்டுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து மாலையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 21ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் 21ம் தேதி கூட்டப்படுகிறது. அன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்கிறார். அதன் மீது விவாதம் நடைபெறும். பின்னர் 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எம்.பிக்கள் வெளிநாட்டுப் பயணம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக நேற்று காலை பிரதமரின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாலையில் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications