செல்வம் எம்.எல்.ஏ மீது திருமாவளவன் திடீர் பாய்ச்சல்
மதுராந்தகம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ செல்வம் என்கிற செல்வப் பெருந்தகையை கண்டிக்கும் வகையில் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், இந்த அமைப்பில் இருந்து கொண்டு சிலர் கட்டபஞ்சாயத்து செய்ய கட்சி பொறுப்பு வேண்டி சண்டை போடுகின்றனர்.
பொறுப்பு கிடைக்காத ஆத்திரத்தில் அவர்கள் கட்சியை சீர் குலைக்க முயன்று வருகின்றனர். இது போன்ற தற்குறிகளால் தான் தலித் இயக்கங்கள் வளர்ச்சி பெறவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நான் நிற்பதாக இருந்ததால் தான் மங்களூர் தொகுதியை கூட்டணியில் ஒதுக்கினார்கள். ஆனால் என்னிடம் அந்த தொகுதியை செல்வம் வற்புறுத்தி கேட்டு வாங்கி நின்று வெற்றி பெற்றார்.
இப்போது கட்சி பதவி கிடைக்கவில்லை என்றதும் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்க்கிறார். கட்சி பதவியை வைத்துக் கொண்டு சிலர் கோடி கணக்கில் கமிஷன் பெற்றது எல்லாம் எனக்கு தெரியாதா?
ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கூட தங்கள் பெயரையும், குழந்தைகள் பெயரையும் தமிழில் மாற்றி வைத்துள்ளனர். ஆனால் இவர் குழந்தைகளின் பெயரை கூட தமிழில் வைக்கவில்லை.
திருமாவளவனை அம்மாவாலும் சரி, அய்யாவாலும் சரி, யாராரலும் கட்டுப்படுத்த முடியாது என்றார் திருமாவளவன்.
திருமாவளவனின் இந்த ஆவேசப் பேச்சால் அவருக்கும், செல்வத்திற்கும் இடையே மோதல் மூண்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications